Wednesday, March 18, 2009

குருதிப்புனல்

பச்சைவயலாடி பகல் சாய
தாய்தேடி ஓடுமாம் பசுங்கன்று
உச்சிமுகர்ந்து உலகைமறந்து
உயிர்சுரந்து ஊட்டும் தாய்!!!

விலங்கிடை மாந்தர் புக்க
விலைபெறா உயிர்தின்னும்
விந்தைகள் காண்க!!!
நம்மண்ணில்...

பத்து மாதத்தின் தவம்...
பிரசவத்தின் வலி காணா பரவசம்
பரிசளிப்பிற்கான பறைசாற்றல்...

ஒளிதேடி உதைக்கும் ஓர் உயிர்
அந்த உயிர் காண ஏங்கும் தாய்

நமக்கு பிரசவங்கள் இலவசம்
வான்வழி ஏவிய கணைகளில்
நம்மை நாடிவரும் சேவைகள்


நம் அரசுக்கு கோடி நன்றிகள்...

கைமாறு தமிழன் பண்பாடு
ஆனால் எதுவுமில்லை எம்மிடம் இப்போ
எப்போதும் உங்கள் விருப்பம் போலவே
எம்முயிரை ஏற்றுக்கொள்க!!!


தாகம் தீரும்வரை பருகுங்கள்
சுவை சற்று வேறுதான்
வெறி தீரும்வரை தோயுங்கள்
நிறமும் சற்று வேறுதான்...

விருந்தோம்பல் எம் உடன்பிறப்பு...



( இலங்கை அரசின் தாக்குதலில் இறந்துபோன ஓர் கர்ப்பிணித்தாயும்
பிறந்தும் இறந்ததுமான ஓர் பச்சிளம்குழந்தையும்...)

Monday, February 16, 2009

அன்பான உறவுகளே!!!

என் இனிய தந்தைநாட்டு உறவுகளே!!!
தற்போதைய இலங்கையின் போர்ச்சூழல் பற்றி நீங்கள் அறிவீர்கள். மிகவும் திட்டமிட்ட வகையில் இலங்கை அரசு நடாத்திவரும் இந்த பாரிய இன-அழிப்பு பற்றி நீங்கள் நன்கு அரிவீர்கள்...
நாளுக்குநாள் - குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் - எந்தவிதப் பாகுபாடுமின்றி - குடும்பம் குடும்பமாக குண்டுகளாலும், பொஸ்பரஸ் அடங்கிய எரிகுண்டுகளாலும் படுகொலை செய்யப்படுகிறார்கள். "பாதுகாப்பு வலயம்" என அறிவித்து, அங்கே பக்களை வரவழைத்து இலகுவான முறையில் அங்கே எல்லோரையும் ஒரேதடவையில் மக்களை அரக்கத்தனமாகக் கொல்கிறார்கள். சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரச்சொல்லி - ஆண்கள் பெண்களென வகைபிரித்து - பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிப் பின் கொன்று புதைக்கிறார்கள். புதிய ஆண்டும் அவர்களுக்கு கொலைக்களமாகத்தான் பிறந்தது. இந்த ஆண்டின் இரண்டு மாத காலத்தில் மட்டும் - 1500 க்கும் அதிகமான மக்கள் சிறிலங்கா பேரினவாத அரசால் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஒரு இளம் சந்ததியே - ஒரு புதிய தலைமுறையே - கை, கால் இல்லாத சந்ததியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்தச் சூழலில் - இந்த இன்னல் நிறைந்த காலகட்டத்தில் - நம் தமிழகத்திலிருந்து எழும் ஒவ்வொரு ஆதரவுக் குரலும் புலம்பெயர் மக்களாகிய எமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறதென்பதை நீங்கள் அறீவீர்களோ தெரியாது. உங்களின் ஆதரவான ஒவ்வொரு சொல்லும் எங்கள் கண்ணீரைத் துடைக்க வல்லன. எமக்கு ஆதரவாக நீங்கள் வீதியில் இறங்கும் போதும் - உரக்கக் குரல் கொடுக்கும் போதும் - நாம் நம்பிக்கை கொள்கிறோம். சாதாரண நம்பிக்கையல்ல - சரித்திரம் படைக்கிற நம்பிக்கை.

இந்த கொடிய இனப்படுகொலை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் செல்கிறதே தவிர குறைவதாக இல்லை.
இறைச்சிக்காக கொல்லப்படும் ஆடு கோழிகளைவிட மிகவும் மோசமான கொடூரமான முறயில் இந்த கொலைகள் குடும்பம் குடும்பமாக நடைபெறுகிறது...
யுத்ததிலிருந்து காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில், நம் ஆயிரக்கணக்கான அப்பாவி குடிமக்களை இலங்கை அரசின் இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வருமாறு அழைத்து, முதியவர், பெண்கள், குழந்தைகள், ஊனமுற்ற்றவர், கர்ப்பிணித்தாய்கள் என வகை பிரித்து, investigation என்ற பெயரில் நடைபெறும் சித்திரைவதைகள் உங்கள் கண்களால் பார்க்க வேண்டாம், உங்கள் காதால்கூட கேட்கமுடியாது...
நாங்கள் நம் சினிமாவில் மட்டுமே காணும் சிறு சில கற்பழிப்பு காட்சிகளைப் பார்க்ககூட முடியாமல் அழுகிறோம்,
ஆனால் இங்கு எம் கண்முன்னே எம் சகோதரிகள் தாய்மார்கள் என பல நூற்றுக்கணக்கில் தனித்தனியே விசாரணக்கு என்று கூறி அழித்துச்செல்லப்பட்டு, பின்னர் ஒரு மனிதப்பெண்ணால் அனுபவிக்கமுடியாத எல்லாவகையான இம்சைகளையும் அவளுக்கு கொடுத்தபின்னர் அவர்களை கைவேறு கால்வேறாக் கூறுபோட்டு அடியாளம் தெரியாதவகையில் கொன்று புதைக்கபட்டிருக்கிறார்கள்,
இன்று அந்த உடல் பகுதிகள் யாருடையது என்று இனம்காணமுடியாதநிலையில் எரிக்கப்படுகின்றன...
என் அன்பான சகோததர்களே!
இவற்றை நான் சொல்லி உங்களுக்கு தெரியதேவையில்லை நீங்களே இவற்றை இன்று நம் அனைத்து தமிழ் ஆங்கில இணையத்தளங்களிலும் காணலாம்...
இளம்பெண்களை மட்டுமல்ல வயதான பெண்களைக்கூட இன்னும்சொன்னால் கைக்குழந்தையுடன் விசாரணக்காக அழைத்து செல்லபடும் நம் உறவுகளைக்கூட இவாறு வதைசெய்து கொலைசெய்கின்றது இந்த சிங்கள அரசு...

எதற்காக இந்த இன்வெறி???
கொல்லப்படுபவர்கள் யார்? அவ்ர்கள் மனிதர்களில்லையா?
அவர்களுக்கு அவ்ர்கள் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ உரிமையில்லையா? எதற்காக இந்த அராஜகம்?
அங்கே கொல்லப்படுகின்ற பச்சிளம் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? அவ்ர்களுக்கு "அம்மா", "அப்பா", "அண்ணா", "அக்கா" கூட சரியாக பேசத்தெரியாது, அவர்களை எத்ற்காக இந்த படுகொலை? அவ்ர்கள் இந்த பூமியில் பிறந்தது அவ்ர்கள் தவறா??
இல்லை சகோதரனே....
அந்த குழந்தை ஒரு "தமிழ்க்குழந்தயாக" பிறந்ததுதான் தவறு...
நேற்றையமுந்தினம் கொல்லப்பட்ட 134 அப்பாவிப்பொது மக்களிலும் அனேகமானவர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லபட்டுஇருகிறார்கள்...

பார்த்தீர்களா மக்களே...இறப்பிலும்கூட எங்கள் உறவுகளை பிரியமாட்டோம் என்று குடும்பமாகவே விண்ணுலகம் செல்லும் காட்சிகள் எங்கள் மண்ணில்தான் நிகழ்கிறது...
ஏராளம் ஏராளம்...
4 வயது குழந்தை ஒன்று, கொடிய எரிகுண்டு வீழ்ந்து இறந்துபோன தன் 8 குடும்பத்து உறவுகளின் இறந்த உடல்களை எந்தவொரு உணர்சியுமில்லாமலாமல் சிலையாக நின்று பார்த்துக்கொண்டு இருக்கிறாள்...எவ்வளவு கொலைகளைத்தான் அவளும் பார்த்திருப்பாள்...அவளுக்கு இவைஎல்லாம் பழகிவிட்டது...
உணர்ச்சிகள் செத்துபோய்விட்டது...
என் அன்பான உறவுகளே...
இந்த கொடூரங்கள் உங்கள் நண்பருக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவருக்கு ஏற்மப்ட்டால் உங்களால் தாங்கிக்கொள்ளமுடியுமா?
ஆனால் இங்கு இத்தனை கொடூரங்களும் எங்கள் உடன்பிறந்த எம் அம்மா அக்கா தங்கை தம்பி என்று எல்லோருக்கும் ஏற்பட்டிருகிறது...
இவற்றிற்க்கு முற்றுப்புள்ளி இல்லயா???
எம் மக்களுக்கு விடிவுகாலம் இல்லயா???
அவர்கள்செய்த குற்றம்தான் என்ன???

எம் இனிய உறவுகளே!!!
இன்றைய தினத்தில் உங்கள் ஆதரவு எங்களுக்கும் எம் அல்லலுறும் உறவுகளுக்கும் மிகவும் ஆதரவானதொரு மன நம்பிக்கையை தருகிறது, இன்று நாம் இருக்கிறோம், ஆனால் நாளை எம்மை இந்த கொடிய கொலைவெறிகொண்ட இலங்கை அரசு விட்டுவைக்கப்போவதில்லை, ஒவ்வொருநாளும்குறந்தது 5500 குண்டுகள் வீதம் போட்டு எம்மை முழுமையாக அழித்துவிட கங்கணம் கட்டிக்கொண்டு பேய் வெறியாட்டம் ஆடுகிறார்கள்...

" எம் உரிமையுள்ள மக்களே...எங்களுக்காக எங்கள் உறவுகள் என்று சொல்லிக்கொள்ள உங்களைவிட்டால் எமக்கு வேறு எவரும் இல்லை என்பது உங்களுக்கும் நன்கு தெரியும்..." என்ற ஒரே நம்பிக்கையில் நம் இறுது மூச்சுவரை எங்கள் இளம் பிஞ்சுகளை காத்துக்கொள்கிறோம்...
எங்களுக்காக நீங்கள் உரக்க கூவுகின்ற ஒவ்வொரு குரலும் எங்கள் இந்திய அரசுக்கு கேட்க்கும்....
எங்களுக்காக நீங்கள் சிந்துகின்ற ஒவ்வொரு துழி கண்ணீரும் இரத்தமும் வரலாற்றில் எழுதப்படுகின்றது...
நீங்கள் ஆற்றுகின்ற உயிர்த்தியாகங்கள் யாவும் வரலாற்றில் பொறிக்கப்படுகிறது...
இந்த பந்தம் பாசம் இன்று நேற்று முழைத்தல்ல...
இதுதான் எம் பண்டைத்தமிழர் வரலாற்றுப்ப் பின்னண்ணி...
இதுதான் உலகறிந்த உண்மையும்கூட....

என் சகோதரனே, சகோதரியே!!!
எமக்காக, உங்கள் உறவுகளுக்காக நீங்கள் ஆற்றுகின்ற இத்தனை தியாகங்கள்ளும், ஆதரவுகளும் உங்கள் ஈழத்து உறவுகளை சாவின் குழிலிருந்து மீட்ட்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு என்றும் உண்டு...
உங்கள் எல்லோரதும் ஒருமித்த ஒரே குரலால்தான் நம் இந்திய அரசை நம் பக்கம் நோக்கி திருப்பமுடியும்...
இது உங்கள் உரிமையான கடமை...
எங்கள் வருங்காலசந்ததியின் வாழ்வு உங்கள் கைகளில்தான் இருக்கிறது...
அன்பானவர்களே!!!
ஆஸ்திரேலியாவில் இயற்கைஅனர்த்தமாய் காட்டுத்தீயில் இறந்துபோன 150 மக்களுக்காக உலகம் முழுவதும் கண்ணீர் வடித்தோம்...ஆம் மனிதாபிமானம்...
எங்கள் தேசத்தில் தினம் தினம் 100க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள், அதுவும் கொலைவெறிகொண்ட சக மனிதர்களாலேயே படுபாதகமாக கொலைசெய்யப்படுகிறார்களே....
இங்கு மட்டும் மனிதாபிமானம் எங்கு சென்றுவிட்டது???
நாங்கள் மனிதர்களில்லையா???
உலக மக்களிடையே ஏன் இந்த பாரபட்சம்???
எம் அழுகுரல்கள் உண்மையாகவே இந்த உலகிற்கு கேட்கவில்லயா???

இறைவனுக்கு கூட கேட்கவில்லயா???

எங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்....
ஒவ்வொரு நாளும் ஒவ்வொருமுறை நீங்கள் இறைவனை வணங்கும் போதும், செத்துக்கொண்டிருக்கும், உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் உங்கள் ஈழத்து உறவுகளுக்காக, அவர்களுக்கு நிம்மதியான வாழ்வு விரைவில் மலர வேண்டியும் உங்கள் உங்கள் இறைவனிடம் பிரார்த்தியுங்கள்....
இறைவனால் மட்டுமே நம் இந்திய அரசின் மனதை மாற்றமுடியும்...ஈழத்து தமிழர்களுக்கு தமிழகத்து உறவுகள் இருகிறார்கள் என்று இந்திய அரசுக்கு புரியவேண்டும்...

இறுதியாக,
என் பாசத்திற்குரிய என் உறவுகளே!!!
என் வரும்கால இளைய சந்ததிக்காய், நீங்கள் இருக்கிறீர்கள் என்ற ஒரே நிம்மதியுடன் உங்களிடமிருந்து பாசத்துடன் விடைபெறுகிறேன்...

நாளை என் உருவப்படத்திற்கு ஒரு பூ வைப்பதற்காகவாவது எனக்கு ஒரு உறவு மிச்சமிருக்காதா என் தேசத்தில்!!!

என்றும் அன்புடன் ஈழத்திலிருந்து

உங்கள் சகோதரன் -

Friday, January 16, 2009

சந்திப்பு....

நண்பா உன் முகவரி கூறு...

வான்மகள் காதல் கொண்டு
பூவுடல் சிலிர்க்க...
என்னை விழி வழி பெயர்த்தாள்..
மண் தொடும் யாத்திரையில் நான்...
சற்று இளைப்பாற...
புல்நுனியில் சிறு தூக்கம்...

நண்பா...
அவள் மோகம் தீர்க்க
என் குடில் புகுந்ததாள்..
இன்று நானும்...
உன்னைப்போலவே....
அனாதயாய்.....


கவலை வேண்டாம்....
சற்றுப் பொறுத்துக்கொள்...
அவள் காதலன் கண்திறக்கட்டும்...
என்னையும் மீண்டும் ஏற்றுக்கொள்வாள்...
உன் குடிலும் ஒளி பெறும்...

Thursday, January 15, 2009

வேல் விழியாள்...

கோடை கால வெப்பம் தணிக்க வந்து போன மழையின் ஈரம் காற்றுக்கு குளிர்மை தந்து அந்த மாலைப்பொழுதை மயக்கம் செய்தது...
நகரத்து மாட மாளிகைகள் சூழ ஓர் அழகிய கற்கோவில்,அருகே அழகிய ஒரு மணிமண்டபம்,அங்கு ஒரு விழா ஆயத்தம்,

உள்நுளையும் வாசலில் கால் வைக்கும்போது ஒரு இனம்புரியாத உணர்ச்சி,
வரவேற்ப்பு மாந்தர்களின் புன்னகை
கூடியிருந்த அறிந்தவரின் பேச்சு,ஆரம்பித்திருந்த ஒலிப்பேழையின் இசை,அங்குமிங்கும் ஓடி விளையாடிய குழந்தைகளின் ஆரவாரம்,
இவை அனைத்தயும் கலைத்து ஓர் உள்ளுணர்வு...
"அப்படி என்ன அதிசயம் நிகழப்போகிறதோ"

யாராவது என்னை அழைத்தார்களா?
இல்லயே....
யாரோ என்னை பிந்தொடர்ந்து வருவதுபோல ஓர் உணர்வு,

படிக்கட்டுகள் வழியாக...ஒரு உருவம்,
உருவம் அல்ல அது,ஒரு சிறு மின்னல் கீற்று...

மயில் தோகையே வடிவான பச்சைவண்ண்ணத்தில்
ஒரு பட்டாடை,
புள்ளிமான் வேகம் பெற்றுத்தாவும் சிறு ஆட்டுகுட்டியாய் ஒரு குறுகுறு நடை,அதிலும் ஒரு சிறு நெழிவு தாங்கி,
நீர் வகுத்த தீவுகளாய் பிரிந்தும் கூடியும் அந்த மென்னுடலை இரு சிறு தீவு செய்துநின்றது மெல்லிடை,
இந்த தீவுகூட்டத்தை இரு மெல்லிய தாமரை தண்டுகளாய் தாங்கிநின்றது அந்த வேகம் கொண்ட இரு பாதங்கள்...
மழையில் நனைந்து ஒதுங்கும் சிரு பூனைக்குட்டியின் பதுமை,
சற்றே காற்றில் பறந்த தாவணியை இழுத்து அந்த சிற்றிடையில் ஒரு சுற்று சுற்றி.....
வீற்றிருந்தாள் அழகி.....
தென்றலில் அலயாடும் தென்னம்கீற்றில் சந்திரனின் பொன்னொளி பட்டு அவற்றை பொன்னிறமாக்கும் மாயமாய்,அவளுக்கே சாமரம் செய்துநின்றது அந்த அழகிய கூந்தல்,சில குறும்பு முடிகளை இழுத்து சிறை செய்து,சிலவற்றை விடுமுறை செய்து பெண்கூந்தல் லட்சணம் கூறிநின்றாள் அந்த பூங்குழலி...

என்னை வெளியில் சிறைசெய்தாள்...

கார்மேகம் சூழ முழுமையான ஒளி துலங்கா முழுநிலவாய்...
அவ்விரு சிறு மடல் கவ்விநின்றிருந்தன அந்த இரு வாழ்விழியை...
மது உண்ட கருவண்டுகளாய் சுற்றிச்சுழன்றன அந்த இரு நயனங்கள்...

மழை இல்லை,ஆனால் ஒரு குளிர் காற்று,
மேகம் விலகுமுன்பே இடித்ததாய் அடித்துநின்றது என்இதயம்,
வேல்தாங்க சித்தம் கொண்டது நெஞ்சம்...
அழகிய சிரு மடல் விலக்கியது,
ஆயிரம் மின்னல் கீற்றுகளின் ஒளியாய் ஒரேநேரத்தில் என்னில் வீசினாள் அந்த வேல்களை...

Tuesday, January 13, 2009

துளசி...

என் வீட்டில் ஒரு அழகிய மாடம்
அதில் ஒரு தூய்மையான துளசிச்செடி...
என் பகலும் இரவும் அதனுடன்தான்...

மனதுக்கு இதமான கண்ணுக்கு பதுமையான
என்றும் பச்சை தோய்ந்த தோற்றம்...

என் ஸ்வாசம் நிறைக்கும் தூய்மை
என் கனவுலக தேவதை...
அவளின் ஸ்பரிஸம் தேடும் என் இதழ்கள்...

சிட்டி விளக்கொளியில் கண்சிமிட்டும்
என் இரவின் தேவதை அவள்...
இன்னும் சொன்னால்....
என் சுகதுக்கங்களை பகிர்ந்துகொள்ளும்
என் தோழி...
என்னை பற்றி என்னை விட
அவளுக்கே நன்கு தெரியும்...
என் வீட்டு மஹாலக்ஷ்மி....
தென்றல் அவள் சுகந்தம் தாங்கி
என் வீடு நிறைக்கும்...

என் வாழ்வின் தவம்...
அந்த தூய துளசிசெடி....

பாவமறியா என் பச்சிளம்கண்டு....
இன்று பாழ்பட்டுப்போனதேனோ???
உயிர் நீர்வற்றி போனதாலோ...
பதில் சொல்வார் யாரோ???

மாடம் மட்டும் தனிமையில்...
இன்று வேர் அடி மண் சுமக்கிறது...